பொதுத்தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் அவசியம்- சிவசக்தி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, January 20, 2020

பொதுத்தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் அவசியம்- சிவசக்தி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். எனவே ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை.

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பது ஒரு விடயம்.

அதேநேரம் நீண்டகாலமாக மக்கள் போராடி உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த உயிர் தியாகத்தின் முக்கிய நோக்கம் இந்த மண்ணில் தமிழ் மக்களினுடைய இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும், மொழி பாதுக்காக்கப்பட வேண்டும், கலாசாரம், பண்பாடுகள், நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த தேவைகளுக்காகத்தான் இந்த நீண்ட போராட்டம் நடைபெற்றது.

அந்தக் காரணங்களுக்காகத்தான் இந்த மண்ணில் பல இலட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள் பல்லாயிரம்கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம். இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது.

அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம்.

ஆகவே ஒரே நாட்டுக்குள் அவ்வாறானதொரு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதொரு விடயம். அபிவிருத்தி, அரசியல்தீர்வு ஆகிய இரண்டு விடயங்களையும் எவ்வாறு சமாந்தராமாக கொண்டு செல்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ்தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களில் நிறையவே தோல்விகளையே சந்தித்து இருக்கின்றது. அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதும் எடுத்துக்கொண்ட சில முயற்சிகள் முற்று முழுதாக அவர்களின் நடவடிக்கை காரணமாக தோல்வியில் முடிந்தது என்பதுதான் வெளிப்படையானது.

அவர்கள் தமிழ் மக்களுக்கு சாதனைகளை புரிகின்றோம் என்ற அடிப்படையில் உண்மையாகவே அவர்கள் கடந்த மைத்திரி-ரணில் அரசாங்கத்தை பாதுகாப்பதுதான் அவர்களது முதன்மையான வேலைத்திட்டமாக இருந்தது.

அந்த வேலைத்திட்டத்தை அவர்கள் நாடாளுமன்றத்திலும்  உயர் நீதி மன்றத்திலும் ஜெனீவாவிலும் இலங்கை அரசாங்கத்திற்காக போராடி இருக்கின்றார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக கடந்த அரசாங்கத்துடன் இணைந்து இவர்களால் ஒரு விடயத்தை கூட சாதிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இந்த நிலையில் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றம் என்பது அவசியம் தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்னெடுத்து செல்லக்கூடியவர்கள் அதற்கான காத்திரமான வழிமுறைகளை கண்டறிந்து செயற்படக்கூடியவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.