12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோமென புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். க.இன்பராசா மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர்.
எனவே அனைவரும் மொட்டுக்கு வாக்களிப்போம். அவர்கள் எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையிலுள்ள 132க்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த வாக்குறுதியின் அடிப்படையில் அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது” என கேள்வி எழுப்பியுள்ளார்.