நகத்தை பிடுங்கி, கைகளை வெட்டுவோம்… உடல்களை துண்டாக்குவோம்’: வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி வெளியாகும் திகில் தகவல்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 11, 2019

நகத்தை பிடுங்கி, கைகளை வெட்டுவோம்… உடல்களை துண்டாக்குவோம்’: வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி வெளியாகும் திகில் தகவல்கள்!

வெள்ளை வாகனத்தில் கடத்தப்படுபவரை எப்படி சித்திரவதை செய்து, கொலை செய்தார்கள் என்ற இரத்தத்தை உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார், அந்த பணியில் முன்னர் ஈடுபட்ட ஒருவர்.

கொழும்பில் நேற்று (10) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய அந்தோனி பெர்னாண்டோ என்பவர், தானும் இரண்டு கடத்தல்களில் தொடர்புபட்டிருந்ததாகவும், அதில் ஈடுபட மனச்சாட்சி இடம்கொடாததை தொடர்ந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தூக்கும் வாகனத்தில் அவரை கொண்டு செல்ல மாட்டோம். ஒரு வாகனத்தில் தூக்கி, இன்னொரு வாகனத்தில் கொண்டு செல்வோம். கோட்டாபய ஐயா வெள்ளைவான் பற்றி தெரியாதென்கிறார். அவர்தான் இதன் சூத்திரதாரி. அவரது உத்தரவின்படிதான் இது நடந்தது.

இராணுவத்தின் பிரிகேடியர், மேஜர் ஒருவரின் கீழ் இவை நடந்தன. தெற்கில் புத்தளம், மொனராகல, வெல்லவாய, கதிர்காமம், திஸ்ஸ பகுதிகளில் நான் செயற்பட்டேன். இப்படி நாடு முழுக்க பல குழுக்கள் இருந்தன. அங்கு நடந்தவை பற்றி எனக்கு தெரியாது.

தூக்கப்படுபவரை மொனராகலையிலுள்ள ஒரு இடத்திற்கு கொண்டு செல்வோம். அங்குள்ள அறையொன்றில் அடைத்து வைத்து விசாரணை நடக்கும். விசாரணையின் போது கண்கள் கட்டப்படும். சித்திரவதை நடக்கும். தலையை தடவி கேட்டால் சொல்ல மாட்டார்கள். அதனால் விரல்களில் நகங்களை பிடுங்குவோம், கைகளை வெட்டுவோம், கத்தியால் குத்துவோம்.

இதுபோன்ற சிலவற்றை செய்து கோப்பு ஒன்றை மேலிடத்திற்கு அனுப்புவோம். அங்கிருந்து பின்னர் இன்னொரு ஆவணம் வரும். வேலையை முடிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் கொலை செய்வது.

கொலை செய்த பின்னர் மொனராகலை பகுதியிலுள்ள வாவியொன்றிற்குள் கொண்டு சென்று உடலை போடுவோம். அதற்குள் ஏராளம் முதலைகள் இருந்தன. கொண்டு செல்ல முன்னர் உடல்கள் வெட்டப்படும். உடலுக்குள் உள்ளவை அகற்றப்படும். அதன் பின்னரே உடல்கள் வாவிக்குள் போடப்படும்.

இந்த வீடுதான் சித்திரவதை கூடமாக இருந்தது. பக்கத்தில் வாகன கராஜ் உள்ளது வாகனத்தரிப்பிடத்திலிருந்து வாகனம் பின்பக்கமாக எடுக்கப்படும். முதலில் இலக்கத்தகடு மாற்றப்படும். அதன்பின்னர் வாகனத்தில் நபரை தூக்குவோம். ஆனால் வேறு வாகனத்திலேயே கொண்டு முகாமிற்கு வருவார்கள். நபரை தூக்கிய வாகனம் 3,4 மணித்தியாலங்களின் பின்னரே திரும்பும். யாராவது பின்தொடர்ந்தால் அடையாளம் காணாமலிருக்க இந்த ஏற்பாடு.

அந்த இடத்தல் தற்போது 15வது இராணுவ மாணவர் படையணி முகாம் உள்ளது. 2008, 2009 வரை அங்குதான் கடத்தல் முகாம் அமைந்திருந்தது. மொனராகலை நகரில் கணக்காளர் திணைக்களம் அமைந்துள்ள வீதிப்பகுதியில் இந்த இடம் உள்ளது.

இது குறித்து விசாரணை நடந்தால் பூரண ஒத்துழைப்பு கொடுப்பேன். இந்த நடவடிக்கைக்கு இராணுவம், பொலிஸ் பூரண ஒத்துழைப்பளித்தனர். உதாரணமாக, மொனராகலை பகுதியில் ஒருவரை தூக்கினால், அந்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு, ஒருவரை தூக்கி விட்டதாக அறிவிக்கப்படும். யார், என்ன, எங்கே என்ற விபரத்தை சொல்வதில்லை.

உடல்களை போட்ட வாவிக்கு நான் செல்லவில்லை. தூக்குவது ஒரு அணி, கொல்வது ஒரு அணி, உடல்களை அப்புறப்படுத்துவது ஒரு அணி. அங்கு நூற்றுக்கணக்கான முதலைகள் இருந்தன. போட்டதும் முடிந்து விடும். அங்கு ஆய்வு நடத்தினால் சில வேளைகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் என்றார்.