கோட்டா தலையில் விழுந்த அடுத்த குண்டு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 29, 2019

கோட்டா தலையில் விழுந்த அடுத்த குண்டு

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என அரசாங்க திணைக்களங்கள் தெரிவித்ததாக குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் குறித்த ஆவணங்கள் தம்மிடம் இல்லையென கைவிரித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்ரகுப்த தெனுவெர ஆகியோர் செய்த முறைப்பாடு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான ‘பி’ அறிக்கையிலேயே குற்ற விசாரணைத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான ஆவணங்களைக் கேட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் எழுத்து மூலம் தாம் கோரியிருந்ததாகவும், அதற்கு குடிவரவுத் திணைக்களம் அனுப்பியுள்ள பதிலில், 2005ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சே அந்த விவகாரத்தை கையாண்டது என்றும், தம்மிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்றும் கூறியுள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சிடம் ஆவணங்களைக் கோரி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரட்டை குடியுரிமை தொடர்பான விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினாலேயே கையாளப்பட்டுள்ளன என்றும், கோரப்பட்ட ஆவணங்கள் எதுவும் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை என்றும் பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு, குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் சி.ஐ.டி.யினரால் கோரப்பட்டது.

இதையடுத்து, கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜெயரத்ன, சி.ஐ.டி.யின் கோரிக்கையை ஏற்று குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும் ரிட் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா குடியுரிமை எப்போதாவது சட்ட பூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.