பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது. தேவைப்படின் கடலை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள்.
அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள் ஆராய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது.விமான நிலையாயத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப்படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன்.
அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரப்வி அதன் ஊடாக ஓடுதளத்தை அமைக்க முடியும் என்றார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை.
நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வர முடியும் என்றனர்.