பொங்கலிற்கு போட்டியாக பிரித் ஒதுதலாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 4, 2019

பொங்கலிற்கு போட்டியாக பிரித் ஒதுதலாம்?


முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழாவிற்கு எதிராக பிரித் ஓதும் நிகழ்வு நடத்தப்பட்டால் மத வன்முறைகள் மூளலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை 108 பொங்கல் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இன்று (04) தொடக்கம் பிரித் ஓதும் நடவடிக்கையை முன்னெடு;ப்பதற்கு சர்ச்சைக்குரிய விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். 
இந்நடவடிக்கையே மத வன்முறைக்கு காரணமாகலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையில் பிரித் ஓத பௌத்த – சிங்கள பேரினவாதம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் அங்கு பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது. 

சைவத்தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசம் முல்லைத்தீவு செம்மலை. அங்குள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள்; வழிபாடு செய்த தலம். 

எனினும், தற்போது அந்த இடத்தை ஆக்கிரமிப்பதற்கு பௌத்த சிங்களத் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

அதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் நீதிமன்று வரை சென்றுள்ளது. வழக்கு நடைபெற்று வருகின்றது. 

இதேவேளை, தமிழ் மக்களின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் தாயகத்தில் உள்ள சைவத்தமிழ் இளைஞர்கள் செம்மலை ஆலய பரிபாலன சபையுடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை பெருமெடுப்பில் பொங்கல் நிகழ்வை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

இந்நிலையில், அங்கு தங்கியிருக்கும் பௌத்த பிக்கு, ஆலய வளாகத்தில் இன்று தொடக்கம் பிரித் ஓதும் நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார். 

கடும்போக்கு பௌத்த அமைப்பான சிஹல ராவய போன்ற பௌத்த அமைப்புக்களின் தலைவர்களையும் இந்த நிகழ்வுக்கு அழைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.