ஆடி அமாவாசை தின விரதமான இன்று திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் இறந்த தமது மூதாதையகளிற்கு இந்துக்களால் பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.
இந்நிலையில் ஏட்டிக்கு போட்டியாக அங்கு இன்று பௌத்தர்களும் விசேடவழிபாடொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் ஆடிஅமாவாசை விரதம் அங்கு சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.
பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தணர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.
இந்நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த பிக்குகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.