மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலியல் தொல்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 7, 2019

மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலியல் தொல்லை

மதுரையில் மருந்து தடவி பாலியல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி என்கிற பெண் பொலிஸார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சீனிவாச பெருமாள் என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் முடிந்து ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன்- மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவருடைய கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதனை தீர்த்து வைப்பதற்காக தனது சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவரின் உதவியை சந்தான லட்சுமி நாடியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பூமிநாதன், ஆறுமுகம் என்பவருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தான லட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கேரளாவை சேர்ந்த ஜோதி என்கிற சாமியார் பூஜை நடத்தினால், கணவருடன் இருக்கும் பிரச்னை சரியாகிவிடும் என பூமிநாதன் கூறியிருந்தார். இதற்காக நான் என்னுடைய கணவரின் சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றேன்.

நாங்கள் நான்கு பேரும் காரில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் சாமியார் ஒருவிதமான மையை என் மீது தடவினார். இதனால் நான் மயக்கமடைந்து விட்டேன். பின்னர் விழித்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் கலைந்திருந்தன.

நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததும், பூமிநாதனுடன் சண்டையிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். அப்போது பூமிநாதனின் தந்தை எனக்கு போன் செய்து, இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால், கஞ்சா வியாபாரிகளை வைத்து என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.