கல்முனை போராட்டம் ஒரு இனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தமது போராட்டத்தினை யாரும் திசைதிருப்பவேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அத்துடன் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நன்மை கருதியே இந்த போராட்டத்தை தாம் மேற்கொண்டுவருவதாகவும், இலங்கையர் என்ற அடிப்படையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்கள் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் 30வருடத்திற்கு மேலாக கல்முனை மக்கள் பல்வேறு போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ள போதிலும் அவை புறந்தள்ளப்பட்டே வந்ததாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.