ஷாபி சஹாப்தீனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 29, 2019

ஷாபி சஹாப்தீனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது!



குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சஹாப்தீனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சருக்கு அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வைத்தியர் ஷாபிக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் மொஹமட் ஷாபி சஹாப்தீன், கடந்த மே மாதம் 25ஆம் திகதி, மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை, அந்த நிதியூடாக சொத்துகளை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய, அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால், பி-210 அறிக்கையுடன் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று முன்தினம் (28) ஆஜர்படுத்தப்பட்டார்.



எனினும், வைத்தியருக்கு, பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக தெரியவரவில்லை என, பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதித்துள்ளமை குறித்து தெரியவரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர் பெண்களின் பலோபியன் குழாயை இடைமறித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளூடாக தகவல்கள் வெளியாகவில்ல​ை என்றும் குற்றப்புலனாய்வுப் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது.

வைத்தியர் ஷாபி ,தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.