கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக DNA அறிக்கை பெறப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இரகசியப் பொலிஸார் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் லங்கா ஜயரத்ன இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவிற்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரின் பொறுப்பில் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை தேசிய தௌஹீத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷீக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் காஞ்சனா சில்வா கொழும்பு குற்றப் புலனாய்விற்கு அறிவித்துள்ளார்.