உதயன் பத்திரிகையில் விளம்பரம் செய்து இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய மன்மதராசா: யாழில் சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 3, 2019

உதயன் பத்திரிகையில் விளம்பரம் செய்து இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய மன்மதராசா: யாழில் சம்பவம்!

பத்திரிகை ஊடாக விளம்பரப்படுத்தி திருமணம் செய்வதாக 9 லட்சம் ரூபா பணத்தை இளம் பெண்ணின் குடும்பத்திடம் பெற்று மோசடி செய்த இளைஞனை ஒரு வாரத்துக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளரிடம் பெற்றுக்கொண்ட 9 லட்சம் ரூபா பணத்தை முழுமையாக மீளச் செலுத்தவேண்டும் என்று எச்சரித்த நீதிமன்று, அதுவரை பிணை வழங்கப்படமாட்டாது எனச் சுட்டிக்காட்டி சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

1989ஆம் ஆண்டு பிறந்த நெல்லியடியைச் சேர்ந்த மணமகனுக்கு மணமகள் வேண்டும் என்று உதயன் பத்திரிகையில் வெளியாகிய விளம்பரத்தை பார்த்த இளவாலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அதில் குறிப்பிட்டப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை சமுர்த்தி அலுவலகர் என அறிமுகப்படுத்திய இளைஞன் நேரிலும் அந்தக் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். தனக்கு தாய், தந்தையர் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் செய்து வைக்க இளம் பெண்ணின் குடும்பத்தினர் தயார்படுத்திய நிலையில் அவர்களிடம் வீடு கட்டுவதற்கு வேண்டும் என சீதனத்தில் முற்பணமாக 9 லட்சம் ரூபா பணத்தை அந்த இளைஞன் கேட்டு வாங்கியுள்ளார்.

பணத்தைப் பெற்ற இளைஞன் சில நாள்களின் பின் தொடர்பில்லாமல் போக அந்தக் குடும்பத்தினர் காங்கேசன்துறை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நெல்லியடி பொலிஸ் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விளம்பரம் வெளியிட்ட பத்திரிகையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.


நெல்லியடியில் பிறந்த சந்தேகநபர் தனது மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வருபவர் என்பதுடன் அவர் ஏற்கனவே திருமணமாகி மணநீக்கம் பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சந்தேகநபர் 1991ஆம் ஆண்டே பிறந்தவர் என்று கண்டறியப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபரை முறைப்பாட்டாளரிடம் பெற்ற பணத்தை மீளச் செலுத்த முடியுமா? என கேட்டது. அதற்கு உரிய பதில் சந்தேகநபரால் வழங்கப்படாத்தால் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.