முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட சடலம் கடந்த மாதம் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோருடன் வசித்து வந்தவர் கடந்த மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போயிருந்தார்.
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து பல்வேறு பகுதிகளிலும் தேடுதல்களை மேற்கொண்டபோதும் குறித்த நபர் பற்றிய தகவல் ஏதுவும் கிடைக்காத நிலையில் பெற்றோர் உறவினர்கள் தொடர்ந்தும் தேடுதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் வயல் காணியைத்துப்பரவு செய்ய சென்ற போது, ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற உறவினர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தடையப்பொருட்களை வைத்து காணாமல்போன 45 வயதான பாலசிங்கம் ஜெயபவான் என்பவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.