இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளான பெரிய வெள்ளி தினத்தை உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று அனுஷ்டிக்கின்றனர்.
இயேசுபிரான் மானிடர்களின் மீட்புக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். அன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்தவகையில் இன்றும் இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
மேலும் சிலுவைப் பாதை ஊர்வலம், பெரிய வெள்ளிக்கிழமையாகிய இன்று நாட்டின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதோடு, இன்று காலை முதல் மாலை வரை தேவாலயங்களில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள்.
இந்த பிரார்த்தனையின்போது இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் கூறிய 7 திருவசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள் நடைபெறும்.
அத்தோடு நாளை மறுநாள் இயேசு நாதர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.