புதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 12, 2019

புதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று இடைநடுவில் பழுதடைந்து நிற்பதால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இ.போ.ச. பஸ் வண்டி தம்புள்ளையை அண்மித்த காட்டுப்பகுதியில் டயர் பழுந்தடைந்த காரணத்தினால் இவ்வாறு இடை நடுவில் நிற்பதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

புதுவருப்பிறப்பை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் வயதானோர் குடும்பங்களாக குறித்த பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பயணியொருவர் தெரிவித்தார்.

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதியிடமோ அல்லது நடத்துனரிடமோ அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் வினவியபோதிலும் எவ்விதமான உறுதியான பதிலும் கிடைக்காத நிலையில் தாம் அனைவரும் வீதியோரங்களில் சுமார் அதிகாலை 3 மணியிலிருந்து காத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் ஓர் அர்ப்பணிப்புடன் நடந்துகொள்ளவில்லையெனவும் மிகுதி பணங்களை செலுத்துவதிலேயே மும்முரமாகவுள்ளதாகவும் அவ்வாறு பணத்தை செலுத்தினாலும் இந்த புதுவருட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு மிகுதி பயணதூரத்தை மேற்கொள்வது என்ற கேள்விகள் தம்மிடம் எழுந்துள்ளதாகவும் இந்தநேரத்தில் அனைத்து பயண மார்க்கங்களிலும் செல்லும் பஸ்வண்டிகளில் பயணிகள் நிறைந்தே காணப்படுவரென்றும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாம் இரவு நேர பயணங்களை மேற்கொள்ளும் போது ஏளைய பஸ் வண்டிகளை விட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டிகளை பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்தும் நிலையில் தாம் இவ்வாறு எவ்வித உடனடி நடிவடிக்கையும் இன்றி காட்டுப்பகுதியில் இடைநடுவில் நிற்பது தொடர்பில் கேள்வியொழுப்பியுள்ளனர்.

இதேவேளை, புதுவருடதினத்தை முன்னிட்டு மேலதிகமாக 1500 பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.