கல்முனை பகுதியின் தற்போதைய நிலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 26, 2019

கல்முனை பகுதியின் தற்போதைய நிலை!



அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 7.30மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் உள்ள வொலிவேரியன் என்னும் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.


இதன்போது படையினர் திருப்பி தாக்கிய நிலையில் சுமார் இரவு 10.30மணி வரையில் குறித்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதி முழுமையாக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விசேட தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்த தாக்குதல்கள் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு பெண்களும் அடங்குவதாக அங்கிருந்து வரும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

இதேவேளை இன்று சம்மாந்துறையில் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருமளவான வெடிபொருட்களும் தீவிரவாதிகளின் பெனர்கள்,உடைகளும் மீட்கப்பட்டிருந்தன.

கல்முனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காலவரையறையற்ற ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.