பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான்; கவிஞர் பழனிபாரதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான்; கவிஞர் பழனிபாரதி



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாளையொட்டி கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதி சிறப்புக்கவிதை எழுதியுள்ளார். இந்தக்கவிதையை பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
தாஜ்நூரின் இசை ஒலிக்க, கவிதை வரிகளை பழனிபாரதியே வாசித்துள்ளார். இன அழிப்புக்கு எதிரான ஆயுதம்தான் பிரபாகரன் எனும் பெயர் என்று கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ளது படிப்பவரை மெய் சிலிர்க்கச்செய்கிறது.
பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான் என்று கவிதையை அவர் முடித்துள்ளார்.
இதோ அந்தக்கவிதை… எழுத்து வடிவிலும்…
கானுறை வேங்கையின்
கனலும் கண்களைப்பார்த்திருந்தால்,
சமாதானத்தின் வெள்ளைச்சொற்கள் தீர்ந்து
பீரங்கியின் மேல் அமர்ந்திருக்கும் புறாவின்
சிறகுகளைத்தடவிக்கொடுத்திருந்தால்…
நான் உங்களுக்கு அந்தப்பெயரைச்சொல்ல வேண்டியதில்லை.
இன அழிப்புக்கு எதிரான அந்தப்பெயர்
எங்களுக்கு ஓர் ஆயுதம். அது எங்கள் படையெடுப்பு.
அது எங்கள் மானங்காத்த சீருடை.
அது எங்கள் காயம் ஆற்றிய சிகிச்சை.
எம் பெண்களை வன்புணர வருகின்றவர்களின் வழியில்
அது ஒரு கண்ணிவெடியாக இருந்தது.
எம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலாகச்சுரந்தது.
மாபெரும் மனிதச்சங்கிலியான அந்தப்பெயர்
எங்களுக்கு ஒரு விதை. அது எங்கள் பசி.
அது எங்கள் தாகம். அது எங்கள் இரத்தம்.
அது எங்கள் தழும்பு. அது எங்கள் புன்னகை.
காற்றில் தீச்சுடராய் அசையும்
காந்தள் மலரைத்தொட்டுப்பாருங்கள்
அந்தப்பெயரை நீங்களும் சூடிக்கொள்வீர்கள்.
உயிருருக்கும் யாழிசையைக்கேட்டுப்பாருங்கள்
அந்தப்பெயரை நீங்களும் பாடிச்செல்வீர்கள்.
மனிதர்களுக்கு எதிரானவர்கள் அந்தப்பெயரை முள்ளிவாய்க்காலில் புதைக்க நினைத்தார்கள்.
நந்திக்கடலில் கரைக்க நினைத்தார்கள்.
அது எங்கள் கைகளைப்பிடித்துக்கொண்டு
அழைத்துச்செல்லத்தொடங்கிவிட்டது.
அந்தப்பெயர் எங்கள் வழித்துணையல்ல
வழியே அதுதான்! (நன்றி – தமிழ் வன் இந்தியா)
– பழநிபாரதி கவிதையின் வீடியோ வடிவம்: