போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது


தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு.
இன்று தமிழர்கள் எங்கள் மக்களின் விடுதலைக்காக மட்டுமல்ல இந்த விடுதலைப் போராட்டத்தை முடக்க நினைக்கும் சதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.
தோல்வி மனப்பான்மைக்கும் தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையே வேறுபாடு உண்டு. தோல்வி மனப்பான்மை சரணாகதியை நாடிச் செல்லும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும். தோல்வி மனப்பான்மை சமூக வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு வரலாற்றை முன்னோக்கித் தள்ள உந்து சக்தியாக விளங்கும்.
ஈழ விடுதலைப் போராட்டம் தோற்றுப் போன போராட்டம் அல்ல. தோல்விகள் வீழ்ச்சிகள் என எதிர் கொண்ட அனைத்து தடைகளையும் தாண்டி இன்றும் இனியும் வீறு கொண்டு எழுதப்பட்டு கொண்டு இருக்கும் எழுச்சியின் வடிவான போராட்டம். இதை மறுக்கவோ அழித்து எழுதவோ எவராலும் முடியாது. தமிழீழம் என்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் கனன்று கொண்டு இருக்கும் தீ! அதை அணைக்க எவராலும் முடியாது! அது இன்று நீறு பூத்த நெருப்பாக உள்ளது. என்றோ ஒரு நாள் மீண்டும் மூண்டு பற்றி எரியும்.
நீண்ட நெடும் வரலாற்றில் நாங்கள் எழுச்சிகளில் மட்டுமல்ல வீழ்ச்சிகளிலும் துரோகங்களிலும் கூட பாடம் படித்து இருக்கின்றோம். எனவே எங்கள் போராட்டத்தை முடக்க எவராலும் முடியாது.
ஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்ல உண்மை என்ற நெருப்பை ஏந்தி எதற்கும் விலை போகாமல் நன்மைக்காக போராடுவதும் போராட்டமே.
இலங்கைத்தீவில் வடகிழக்கை தாயகமாக கொண்ட தமிழர்களின் அரசியல், சமூக அடிப்படை உரிமைகளை வழங்காது இலங்கை அரசானது இனத்துவேச அடிப்படையில் அடக்கியாண்டு வருகிறது. தமிழர்கள் அவற்றை சனனாயக ரீதியான போராட்டங்கள் மூலம் எதிர்த்த வேளை, அவர்களை ஆயுத வன்முறை மூலம் அடக்கியது.
கருத்து சுதந்திரத்தை முடக்கி, ஊடக சுதந்திரத்தை மறுத்தது எதிர் நிலைப்பாட்டடளர்களை படுகொலை செய்தது. கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கலாச்சார சிதைப்புக்கள் என தனது இனவெறி இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது. இன்றும் கட்டமைப்பு ரீதியாக தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது வருகின்றது.
ஒரு சாண் வயிறு நிரப்ப இன வலிக்காக குரல் கொடுக்காமல் எதிரிக்கு சாமரம் வீசி மக்களுக்கு குரல் கொடுக்காது இருப்பதும் கோழைத்தனத்தின் ஒரு அங்கமே.
மக்களை ஏமாற்றும் துரோகங்களை எவர் செய்தாலும் மக்கள் மன்னிக்கப் போவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யாத எவரையும் மக்கள் நினைவில் கொள்ளப் போவதில்லை.
மக்களுக்காக ஆயுதத்தை ஏந்தி மட்டுமல்ல அகிம்சையை கையில் எடுத்து நீராகாரம் கூட அருந்தாமல் அணு அணுவாக உயிர் உருக்கி வார்த்த திலீபனின் ஈகம் கூட வார்த்தைகளுக்குள் அடங்காத போராட்டத்தின் எழுச்சி வடிவமே.
கொள்கை ரீதியா இருக்கும் தமிழீழ கோட்ப்பாட்டை தமிழ் அரசியல் வாதிகளையும் சிங்கள அரசையும் வைத்து தோற்கடித்து விடலாம் கால ஓட்டத்தில் என்று இந்தியா நம்புகிறது. இது இந்தியாவிற்கு முக்கியமானது ஏனெனில் தமிழீழத்தில் தமிழ் தேசியம் என்ற கொள்கையை வாழவிட்டால் அது தமிழ் நாட்டில் அணைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய நெருப்பை மீண்டும் பற்றவைக்க கூடும் என்ற அச்சம் உண்டு. ஆகவே இந்தியா என்ற பெரு வல்லரசு உருவாக வேண்டும் என்றால் தமிழ் தேசியம் அழிக்க படவேண்டும் என்பது அவசியம் என்று இந்தியா நம்புகிறது
தமிழர்களின் பொருளாதார பலத்தை அழிப்பதே சிங்கள இந்திய தேசங்களின் நோக்கமாகும்.
இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு துணை போகலாம். ஆனால் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.
வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங்களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.
* பலாலி விமான நிலையம்
* காங்சேசன்துறை துறைமுகம்
* சீமெந்து தொழிற்சாலை
* மன்னார் பெற்றேல் கிணறுகள்
* புல்மோட்டை இல்மனைற்
* சம்பூர் அனல்மின் நிலையம்
* திருகோணமலையில் 650 ஏக்கர் நிலம்
* துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்கள்
* திக்கம் வடி சாராய உற்பத்தி நிலையமும் இந்தியாவுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டு விட்டது .
தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைப் போராட்ட உந்துதலையும் விற்று எதிர்க்கட்சித் தலைவராக தனது இறுதிகாலத்தை வாழ்ந்துவிட வேண்டுமென்ற சம்மந்தன் ஐயா அரசியல் இலக்கை அடைந்து விட்டார்.
இராச தந்திரம் என்ற பெயரில் கூனி கிடக்கும் முதுகெலும்புகளை தட்டி நிமிர்த்தி வீரத்தை பாய்ச்சுங்கள்.
“சோற்றுக்காக வாழ்கிறவன் சுருண்டு படுக்கிறான்
சுரணை கெட்டவன் எதிரி காலில் விழுந்து கிடக்கின்றான்
சீற்றம் மிக்க தமிழன் தான் குனிய மறுக்கிறான்..போராட நினைக்கிறான் !!!”
நல்லாட்சி என நம்ப வைத்து தமிழினத்தை தொடர்ந்தும் கழுத்தறுக்கத் துடிக்கும் அரசுக்கு தாளமிட்டு வக்காளத்து வாங்குபவர்களே..
சர்வதேசமும் புலத்தில் வாழும் தமிழ் மக்களும் மறந்தும் இனப்படுகொலை என சொல்லி விடக் கூடாது என ஓடி ஓடி பரப்புரை செய்தீர்களே?
இப்போ பேச்சின்றி ஊமைகளாக இருக்கிறீர்களே? ஸ்ரீலங்கா பேரினவாதிகளோடு சிரித்து குலவி மகிழ்கின்றீர்களே?
எங்கட எம்.பி மார்கள் பாராளுமன்றம் சென்று தூங்குகிறார்கள். அல்லது தங்களுக்கு சம்பள உயர்வு கேட்கிறார்கள். தங்களுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்கள்.
இன்னும்,
* அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
* காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை.
* அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
ஆனால், தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் காலன்கள்போல் முளைவிடத் தொடங்கிவிட்டன மறுபுறம் பூர்விக தமிழ்ச்சிறார்கள் கடத்தப்பட்டு தேரவாத புத்த பிக்குகளாக மாற்றப்படுகின்றனர்.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன
காணிகள் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன
தமிழர் பகுதிகளில் சிங்கள மொழி கட்டாயமாக திணிக்கப்படுகிறது
ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.
இவற்றையெல்லாம் கண்டித்து குரல் எழுப்ப வேண்டிய சம்பந்தர் ஐயா அவர்களோ “நல்லாட்சி நடைபெறுகிறது” என்று சேட்டிபிக்கேட் கொடுக்கிறார். இவ்வாறு அரசுக்கு முண்டு கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நம்மில் சிலர் “வாழ்நாள் வீரர்” விருது கொடுக்கிறார்கள். என்ன அவலம் இது? அரசியல் நாகரிகத்திற்கு (political
Civilization) அல்லது அரசியல் கலாச்சரத்திற்கு (political culture) அல்லது நெறி முறைக்கு (ethics) முரணானது..இன் நிலையில் அரசியல் ரீதியாக ஒற்றுமை பற்றி இந்த கோமாளிகள் பேச முடியாது ..நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தியல் சார்ந்த ஒற்றுமையும் (ideological unity) இங்கு இல்லை ..நிறுவனம் சார் ஒற்றுமையும் (institutional unity) இங்கு இல்லை.தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி பேசி இந்த கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் புலமை சார்ந்து இங்கு சிந்திக்க வேண்டும்
” தேசியத்தலைவரின்சிந்தனைதுளிகள் ”
“”” சிங்கள பேரினவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை.சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு,தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழமக்களுக்கு திறந்துவைக்கிறது.அந்த பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை “””
முள்ளிவாய்க்கால் வரையான களத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்கள் பயணம் தொடரும்.முள்ளிவாய்கால் முடிவல்ல.
சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.
– ஈழத்து நிலவன் –