மும்பையை சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2015-ம் ஆண்டு உறவினர்களை ரெயில் நிலையத்திற்கு வழியனுப்ப சென்றனர்.
இதனால் சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 63 வயது முதியவரிடம் ஒப்படைத்து சென்றனர். ஆனால் முதியவர் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். ஆனால் சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தாள்.
இதன்படி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். மேலும் மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் முதியவர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி சஞ்சாஸ்ரீ காரட் முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.