வேண்டுமென்றே எனது கணவனை சுட்டுக் கொன்றனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 22, 2021

வேண்டுமென்றே எனது கணவனை சுட்டுக் கொன்றனர்!

 இலங்கையில் நேற்று திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர், வீதியால் சென்ற பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தகராற்றில் ஈடுபட்டு, அது இறுதியில் கைகலப்பாக மாறி ஒருவருடைய உயிரையே பறித்துவிட்டது.


உயிரிழந்த இளைஞரின் குடும்பம் தெரிவித்தது,

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் வீதியால் சென்ற தனது சகோதரனை அழைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

முன்பகை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாள் துப்பாக்கிச் சூடு:ஒருவர் பலி?


மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மனைவியின் கதறல்,

தவறுதலாக சுட்டிருந்தாலும் பரவாயில்லை; கையை விசுக்கி கூப்பிட்டு, வேண்டுமென்றே சுட்டு எனது கணவனை கொன்றுவிட்டனர் என, இராஜாங்க அமைச்சர் எஸ்.வி​யாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் மனைவின் கதறியழுந்தார்.


இரண்டொரு நாள்களுக்கு முன்னர், மண் ஏற்றிச்சென்று வீடொன்றுக்கு கொண்டிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மெய்ப்பாதுகாவலர், தாங்கள் போகவேண்டும், லொறியை எடுக்குமாறு கேட்டுள்ளார். கொஞ்சம் இருங்கோ, மண்ணை இறக்கிவிட்டு செல்கின்றோம் என எனது கணவர் தெரிவித்துள்ளார்.


அப்போது டயரை வெட்டி போட்டுவிட்டனர். ஆனால், என் கணவன் திரும்பிவிட்டார். இறக்கிய மண்ணுக்கான காசை வாங்கதான், சென்றார். அதற்கிடையில், கையை விசுக்கி கூப்பிட்டு என் கணவனை சுட்டுக்கொன்றுவிட்டார் என கதறியழுதார்.


வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக உருவ படங்களை எரித்து எதிர்ப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை முதல் மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு இன்று காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா காவல்துறையினர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.


சம்பவ இடத்தை பார்வையிட்ட நீதிபதி

துப்பாக்கி சூடு இடம்பெற்ற இடத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் நேரில் சென்று பார்வையிடப்பட்டுள்ளார்.


துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் முன்பகை காரணமாகவே துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான சூழலில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நேரில் கண்ட முச்சக்கர வண்டி சாரதி செல்லத் தம்பி விஜயராஜா ஊடகங்களுக்கு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


சம்பவ இடத்தை பார்வையிட்ட நீதிபதி

நானும் பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது நான் யார் என தெரியுமா பொலிஸ் என கூறிக்கொண்டு அவர் துப்பாக்கியை எடுத்ததும் துப்பாக்கி வெடித்தது. எனது நண்பன் கீழே விழுந்தான் என முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவித்தார்.


நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக பேசி விட்டு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றின் கீழ் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார்.


இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன். இருந்த போதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்புமாறும் அவர் கூப்பிடுகின்றார் கதைத்துவிட்டு போவோம் என்றும் தெரிவித்தார்.


அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர், நண்பனிடம் என்னடா கைகாட்டியும் நிற்காமல் சென்றாய் எனஎன கேட்டார். அதற்கு நண்பன் இதைக் கேட்க நீ யார் என்றார்.


அதனையடுத்து இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டு நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே விழுந்தான்.


இரத்தம் வெளியே வந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன். அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவலர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது. ஆனாலும் எனக்கு அதுபற்றி தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு உத்தியோத்தர் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. சம்பவத்தில் 34 வயதான நபரொருவர் உயிரிழந்தார்.


குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டார்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.