கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு அளித்த மஹிந்த? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 1, 2020

கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு அளித்த மஹிந்த?

முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் வைத்து இன்றைய தினம் தமிழ் செய்தியாசிரியர்களை பிரதமர் சந்தித்திருந்தார்.
இதன்போது அண்மையில் கருணா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கூறுகையில், கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
கேள்வி - கருணா அம்மான் பொது மன்னிப்பு வழங்கியா விடுதலை செய்யப்பட்டார்?
பதில் (பிரதமர்) - அவருக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாத போதும், பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார். கருணா உட்பட 12000 புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினோம்.
கேள்வி - இவ்வாறு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?
பதில் (பிரதமர்) - பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விடுவிக்க முடியாத குற்றங்களுடன் தொடர்புடைய பலரும் உள்ளடங்குகின்றனர். அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது.
கேள்வி - வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தங்கள் கருத்தென்ன?
பதில் (பிரதமர்) - காணாமல் போனவர்கள் மீண்டும் வரவில்லை என்றாலோ உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே அர்த்தம்.
கேள்வி - கொலை குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்க என்பவரும் பொதுமன்னிப்பின் கீழா விடுதலை செய்யப்பட்டார்?

பதில் (பிரதமர்) - பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை. அது ஜனாதிபதியின் தனிப்பட்ட மன்னிப்பு. ஜனாதிபதி பிரதம நீதியரசருடன் கலந்தாலோசித்தே, தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி அவரை விடுதலை செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.