புண்களில் புழுக்கள் காணப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு மாடுகளை கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர் பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற இரசியத் தகவல் ஒன்றின் அடிப்படையிலே இவை கைப்பற்றப்பட்டன. குறித்த மாடுகளில் பாரிய காயங்கள் காணப்படுவதோடு புண்களிலிருந்து புழுக்களும் வெளிவருவதாக அதிரடிப்படையினர் தெரிவித்ததுடன், கைப்பற்றப்பட்ட மாடுகளை கம்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில் காயங்களுக்குள்ளான மாடுகளில் ஒன்று நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்