தாயகத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஓர் அழகிய இயற்கைச் சூழல் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
முல்லைத்தீவு நகரத்தையும் முள்ளியவளைப் பிரதேசத்தையும் இணைக்கும் மஞ்சள் பாலத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி போகும் வழியில் இந்த அழகிய இயற்கைச் சூழல் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய வண்டல் நிலத்தைக் கடந்து போகும்போதே இந்த அழகிய இயற்கைச் சூழல் எதிர்ப்படுவதாக கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறிய பறவைகள் சரணாலயமாக ஏரியுடன்கூடிய இந்த பகுதி இருந்ததாகவும் தற்பொழுது கவனிப்பாரற்றுக் காணப்படுவதாகவும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளோர் கூறுகின்றனர். சுமார் ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த இயற்கைச் சூழலில் தங்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான இயற்கைச் சூழலைப் பாதுகாத்து பராமரித்து அதற்குரிய தன்மையுடன் வளர்த்தெடுத்திருப்பர்கள் என சிலர் கூறுவதுடன் இந்த இயற்கைச் சூழல் எதிர்காலத்தில் சுற்றுலாதாரிகளால் மாசடையும் நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் அங்கலாய்த்துள்ளனர்.
எவ்வாறாயினும் இதற்கு சில மரங்கள் புதிதாக நடப்பட்டு அவற்றைச் சுற்றி இத்துப்போன பனைமர மட்டைகளால் வரியப்பட்டுள்ளதாகவும் அந்த சூழலுக்கு சமுர்த்தி பசுமைப் பூங்கா என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.