இலங்கையை உலுக்கிய கோர கொலைகள் - பண்டிகைக் காலத்தில் 13 படுகொலைகள் - அதிர்ச்சியில் பொலிஸார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 16, 2019

இலங்கையை உலுக்கிய கோர கொலைகள் - பண்டிகைக் காலத்தில் 13 படுகொலைகள் - அதிர்ச்சியில் பொலிஸார்

கடந்த 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் 13 கொலைச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் ஓடும் மோட்டார் சைக்கிளில் வைத்து இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் 20 வயதுடைய ரீ. தனுஷ்மன் எனும் இளைஞனே கொல்லப்ப்ட்டுள்ளதாகவும், அவரது நண்பன் என கருதப்படும் அதே வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காதல் விவகாரத்தை மையபப்டுத்தி இக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் பண்டிகை காலமான கடந்த 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மட்டும் நாடளாவிய ரீதியில் 72 மணி நேரத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிக மது பாவனையால் ஏர்பட்ட விபரீதங்கள் அதிகமான கொலை சம்பவங்களுக்கு காரணமகையுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் நடமாடும் சேவையை அமர்த்தி, குடிபோதையால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகரைகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

திருமலை சம்பவம்:

நேற்று முற்பகல் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீதியில் இந்த கொலைச் சம்பவம் பதிவாகியிருந்தது.

மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் வருகை தருவதும், ஒரு கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞன் , மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரின் கழுத்தை கத்தியால் அறுப்பதும் அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவகையிருந்தது.



இவ்வாறு கழுத்து அறுபட்ட 20 வய்துடைய தனுஷ்மன் எனும் இளைஞன் ஒரு வாறு அங்கிருந்து போராடி பிரதான வீதியால் ஓடியுள்ள நிலையில், கடற்படை முகாமுக்கு அருகில் மயங்கி வீழ்ந்து அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

பின்னர் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 20 வயதான டேனியல் எனும் இளைஞன் , மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போதே காதல் பிரச்சினையை மையப்படுத்தி இக்கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சடலம் திருகோணமலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பண்டிகை காலத்தில் 13 கொலைகள்:

இதனிடையே பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் இம்முறை நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 72 மணி நேரத்தில் 13 கொலைகள் பதிவகையுள்ளன.

செவனகல, ஹுங்கம, நொச்சியாகம, தனம, குளியாபிட்டிய, இபலோகம, கொலன்ன, ஹிங்குரன்கொட, கலேவல, கொடவல பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

செவனகல இரட்டை கொலை:

செவனகல பொலிஸ் பிரிவின் துங்கமயாய - நுகேலயாயா பகுதியில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையே இருவர் கொல்லப்பட்டிருந்தனர். அங்குள்ள பயிர் நிலம் ஒன்றில் காவல் கடமைக்காக, வாடி அமைத்து தங்கியிருந்த இருவரே இவ்வாறு கூரிய ஆயுதங்களால் தககப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 39 வயதான சாந்த குமார, 54 வயதான நாமபால எனும் இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

ஹுங்கம சம்பவம்:

கடந்த 14 ஆம் திகதி இரவு 11.00 மனியளவில் ஹுங்கம - லுனம பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில் 27 வயதான கசுன் எரந்திக என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நொச்சியாகம:

கடந்த 14 ஆம் திகதி மாலை 6.45 அளவில் நொச்சியாகமையில் மது போதையில் வாய்த்தகராறு முற்றியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 38 வயதான நிசங்க குமார நவரத்ன என்பவரே இதன்போது கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தமன சம்பவம்:

தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொலை செய்யப்ப்ட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். 49 வயதான யசரத்ன சிறிவர்தன என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அவரது முகம் மற்றும் உடை சிதைக்கப்ப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குளியாபிட்டிய சம்பவம்:

கடந்த 14 ஆம் திகதி குளியாபிட்டிய பொலிச் பிரிவின் பெமினிகொல்ல எனும் இடத்தில் 55 வயதான அமரவங்ச எனும் நபர் கொல்லப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட தகராறினால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இப்பலோகம சம்பவம்:

நேற்று முன் தினம் பிற்பகல் 3.30 மணிக்கும் 4.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பணத்துக்காக விளையாடும் விளையாட்டு ஒன்றின் இடை நடுவே இரு குழுக்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்றுள்ள மோதலில் 54 வயதான பிரேமசிரி எனும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலன்ன சம்பவம்:

கொலன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இசைக் கச்சேரி ஒன்றுக்கு செல்ல தயாரான 17 வயதான இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொல்லால் தாக்கி அவரைக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் கூறினர். சம்பவத்தில் 17 வயதான பிரசாத் அபேகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கலேவலை இரட்டைக் கொலை:

கலேவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவகுவ பகுதியில் வீட்டில் இருந்த கணவன் மனைவி அடையாளம் தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு 8.00 மனியளவில் அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர். 53 வயதான காமினி சுரவீர, 51 வயதான அனுலா சுரவீர ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்களாவர். இவர்களில் அனுலா சுரவீர கடந்த 2018 ஆம் ஆண்டு உலக பெண்கள் தினத்தில் முன்மாதிரியான பெண்ணாக விருது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கொலையாளிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்படாத போதும், இதுவரையான விசாரணைகளில் சொத்து பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. அதனை மையப்படுத்தி இருவரை கலேவலை பொலிஸார் தேடிவருகின்றனர்.

ஹிங்குரன்கொட:

ஹிங்குரன்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயந்தி புர பகுதியில் 26 வயதான யுவதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது கள்ளக் காதலனால் தாக்கப்பட்டே அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு கள்ளக் காதலனான சந்தேக நபர் யுவதியிடம் பணம் கோரியுள்ள நிலையில் அதனை கொடுக்காததால் இந்த தாக்குதலும் கொலையும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.



இதேவேளை கொடவல பொலிஸ் பிரிவின் பின்னகந்த பகுதியில் மது போதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி 53 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.