விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளை. – ஈழத்து நிலவன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளை. – ஈழத்து நிலவன்

எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினம் வாழ வேண்டுமெனில் , அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில், தமது தாயகத்திற்காகப் போராடியே தீர வேண்டும் என்பதை வரலாறு நிர்பந்தித்திருக்கிறது. ஓர் இனம் தாய் நிலத்திற்காக தனது இருப்பிற்காக போராடுவது ஓர் உன்னதமான போராட்டம் ” தமிழினத்தின் ஒவ்வொரு தனி நபர் வலுவும் தமிழ் தேசிய விடுதலைக்கு பலன் சேர்க்க வேண்டும். தமிழ் தேசங்களின் விடுதலைக்கு போராட அனைத்து சக்திகளுக்கும் மக்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும். எனின் எந்த போராட்டமும் தோற்று போகாது.

போராட்டத்தை எவரும் இழுத்து செல்ல முடியாது. அது மக்களால் உந்தி தள்ளப்பட்டால் மட்டுமே முன்னகர வல்லதாக இருக்கிறது. நாம் எழுச்சிகளை மட்டுமல்ல வீழ்ச்சிகளையும் கண்டு கடந்து மீண்டு எழுந்த இனம்.

இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.

தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு.

வலிமையாக இன்று நெருக்கடிகளுக்குள்ளும் போராடும் எம் தாயக தமிழ் உறவுகளின் நீதியான நேர்மையான கோரிக்கைகளை செவிமடுத்து தமிழினத்தின் இனப்படுகொலை விசாரணைகளுக்கு நீதி வழங்க வேண்டி உலக தமிழினம் உலக பரப்பெங்கும் போராடி கொண்டு இருக்கும் இக்காலத்தில் தமிழர்கள் எங்கள் மக்களின் விடுதலைக்காக மட்டுமல்ல இந்த விடுதலைப் போராட்டத்தை முடக்க நினைக்கும் சதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.

தோல்வி மனப்பான்மைக்கும் தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையே வேறுபாடு உண்டு. தோல்வி மனப்பான்மை சரணாகதியை நாடிச் செல்லும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும். தோல்வி மனப்பான்மை சமூக வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு வரலாற்றை முன்னோக்கித் தள்ள உந்து சக்தியாக விளங்கும்.

ஈழ விடுதலைப் போராட்டம் தோற்றுப் போன போராட்டம் அல்ல. தோல்விகள் வீழ்ச்சிகள் என எதிர் கொண்ட அனைத்து தடைகளையும் தாண்டி இன்றும் இனியும் வீறு கொண்டு எழுதப்பட்டு கொண்டு இருக்கும் எழுச்சியின் வடிவான போராட்டம். இதை மறுக்கவோ அழித்து எழுதவோ எவராலும் முடியாது. தமிழீழம் என்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் கனன்று கொண்டு இருக்கும் தீ! அதை அணைக்க எவராலும் முடியாது! அது இன்று நீறு பூத்த நெருப்பாக உள்ளது. என்றோ ஒரு நாள் மீண்டும் மூண்டு பற்றி எரியும்.

நீண்ட நெடும் வரலாற்றில் நாங்கள் எழுச்சிகளில் மட்டுமல்ல வீழ்ச்சிகளிலும் துரோகங்களிலும் கூட பாடம் படித்து இருக்கின்றோம். எனவே எங்கள் போராட்டத்தை முடக்க எவராலும் முடியாது.

இலங்கைத்தீவில் வடகிழக்கை தாயகமாக கொண்ட தமிழர்களின் அரசியல், சமூக அடிப்படை உரிமைகளை வழங்காது இலங்கை அரசானது இனத்துவேச அடிப்படையில் அடக்கியாண்டு வருகிறது. தமிழர்கள் அவற்றை சனனாயக ரீதியான போராட்டங்கள் மூலம் எதிர்த்த வேளை, அவர்களை ஆயுத வன்முறை மூலம் அடக்கியது.

கருத்து சுதந்திரத்தை முடக்கி, ஊடக சுதந்திரத்தை மறுத்தது எதிர் நிலைப்பாட்டடளர்களை படுகொலை செய்தது. கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கலாச்சார சிதைப்புக்கள் என தனது இனவெறி இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது. இன்றும் கட்டமைப்பு ரீதியாக தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது வருகின்றது.

ஒரு சாண் வயிறு நிரப்ப இன வலிக்காக குரல் கொடுக்காமல் எதிரிக்கு சாமரம் வீசி மக்களுக்கு குரல் கொடுக்காது இருப்பதும் கோழைத்தனத்தின் ஒரு அங்கமே.

மக்களை ஏமாற்றும் துரோகங்களை எவர் செய்தாலும் மக்கள் மன்னிக்கப் போவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யாத எவரையும் மக்கள் நினைவில் கொள்ளப் போவதில்லை.

தனிமனிதனை தலைமையாக ஏற்க கூடாது. தத்துவத்தையே தலைமையாக ஏற்க வேண்டும்.

கொள்கை ரீதியா இருக்கும் தமிழீழ கோட்ப்பாட்டை தமிழ் அரசியல் வாதிகளையும் சிங்கள அரசையும் வைத்து தோற்கடித்து விடலாம் கால ஓட்டத்தில் என்று இந்தியா நம்புகிறது. இது இந்தியாவிற்கு முக்கியமானது ஏனெனில் தமிழீழத்தில் தமிழ் தேசியம் என்ற கொள்கையை வாழவிட்டால் அது தமிழ் நாட்டில் அணைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய நெருப்பை மீண்டும் பற்றவைக்க கூடும் என்ற அச்சம் உண்டு. ஆகவே இந்தியா என்ற பெரு வல்லரசு உருவாக வேண்டும் என்றால் தமிழ் தேசியம் அழிக்க படவேண்டும் என்பது அவசியம் என்று இந்தியா நம்புகிறது
தமிழர்களின் பொருளாதார பலத்தை அழிப்பதே சிங்கள இந்திய தேசங்களின் நோக்கமாகும்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு துணை போகலாம். ஆனால் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்.
தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும்.
தமிழக மக்கள் இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற்றால் , ஈழத் தமிழர்களும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங்களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைப் போராட்ட உந்துதலையும் விற்று எதிர்க்கட்சித் தலைவராக தனது இறுதிகாலத்தை வாழ்ந்துவிட வேண்டுமென்ற சம்மந்தன் ஐயா அரசியல் இலக்கை அடைந்து விட்டார்.

இராச தந்திரம் என்ற பெயரில் கூனி கிடக்கும் முதுகெலும்புகளை தட்டி நிமிர்த்தி வீரத்தை பாய்ச்சுங்கள்.

சர்வதேசமும் புலத்தில் வாழும் தமிழ் மக்களும் மறந்தும் இனப்படுகொலை என சொல்லி விடக் கூடாது என ஓடி ஓடி பரப்புரை செய்தீர்களே?

இப்போ பேச்சின்றி ஊமைகளாக இருக்கிறீர்களே? ஸ்ரீலங்கா பேரினவாதிகளோடு சிரித்து குலவி மகிழ்கின்றீர்களே?

எங்கட எம்.பி மார்கள் பாராளுமன்றம் சென்று தூங்குகிறார்கள். அல்லது தங்களுக்கு சம்பள உயர்வு கேட்கிறார்கள்.

ஆனால், தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் காலன்கள்போல் முளைவிடத் தொடங்கிவிட்டன மறுபுறம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன காணிகள் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன தமிழர் பகுதிகளில் சிங்கள மொழி கட்டாயமாக திணிக்கப்படுகிறது

அடிமையாக இருப்பதை சுகமாக கருதுபவர்கள், அடிமைத்தனத்தின் ஒவ்வொரு கூறுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து தேவையானவற்றை எதிர்ப்பார்கள்.

குறிப்பாக அடிமைத்தனத்தை வளர்க்கும் எதேச்சதிகாரத்தின் அத்தனை கூறுகளையும் எதிர்ப்பார்கள்.
சுதந்திரம் ஒருபோதும் அடக்குமுறையளர்களால் சுயவிருப்பத்துடன் வழங்கப்படுவது இல்லை.
அது ஒடுக்கப்படுபவர்களால் வலிந்து நிர்ப்பந்தத்தின் மூலம் பெறப்பட வேண்டும்.
ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தோல்வி என்பது அந்த இனம் தொடர்ந்தும் போராடமல் இருக்கும் நிலையில் மட்டுமே ஏற்படுத்தப்படும்.

விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

எங்கு வீழ்ந்தோமோ அங்கிருந்து எழுவோம். முடிந்துபோனவைகளில் இருந்து முன்னோக்கிச்செல்லும்…
எம் தலைமுறைகள் போராடுவார்கள் ஏனெனில் காலம் மீண்டும் மீண்டும் ஒரே வரலாறுகளை அடிக்கடி பிரசவிக்கிறது…அடக்கப்படும் தமிழ் இனம் தங்களது உரிமைக்காக போராடுவதற்கு எவராலும் தடை போட முடியாது!

இலக்கு அடையும் வரை ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளையாகவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பெயரால் பல ஆண்டுகளாக நீதி விசாரணைகள் மறுக்கப்பட்டு சிறைக்கூடங்களுக்குள் முடமாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் இருண்டதாகவே தொடர்கின்றது.

கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் சம்பந்தன், சுமந்திரன்,மாவை போன்றவர்களும், இந்திய வல்லாதிக்கமும் இன்றும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.

சம்பந்தர் ஐயா அவர்களோ “நல்லாட்சி நடைபெறுகிறது” என்று சேட்டிபிக்கேட் கொடுக்கிறார். இவ்வாறு அரசுக்கு முண்டு கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நம்மில் சிலர் “வாழ்நாள் வீரர்” “ இறைபனிச் செம்மல்” என்று பல விருதுகள் கொடுக்கிறார்கள். என்ன அவலம் இது? அரசியல் நாகரிகத்திற்கு (political
Civilization) அல்லது அரசியல் கலாச்சரத்திற்கு (political culture) அல்லது நெறி முறைக்கு (ethics) முரணானது..இன் நிலையில் அரசியல் ரீதியாக ஒற்றுமை பற்றி இந்த கோமாளிகள் பேச முடியாது ..நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தியல் சார்ந்த ஒற்றுமையும் (ideological unity) இங்கு இல்லை ..நிறுவனம் சார் ஒற்றுமையும் (institutional unity) இங்கு இல்லை.தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி பேசி இந்த கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் புலமை சார்ந்து இங்கு சிந்திக்க வேண்டும்

” தேசியத்தலைவரின்சிந்தனைதுளிகள் ”
“”” சிங்கள பேரினவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை.சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு,தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழமக்களுக்கு திறந்துவைக்கிறது.அந்த பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை “””

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருகிறது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.

சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.

நமது அடயாளங்கள் அழிக்கப்படும் போது…தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது…
தமக்கான அதிகாரம் ஒடுக்கும் போது…தனது இனத்தின் உரிமை,சமத்துவத்திற்காக
ஒரே நோக்குடன் செல்லும் பாதையே போராட்டம்…

மக்கள் புரட்சி அரச பயங்கரவதங்களுக்கும் முதலாளித்துவ சுரண்டல்களுக்கும் எதிராக வெடிக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் முதலில் உணர வேண்டும். தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும்.

மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.

போராடுவது ஒன்றே அடிமை தமிழர்தேசியத்திற்கு வழி!!
மண்டியிட்டு பெறுவதல்ல…மார்தட்டி பெறுவது தான் சுதந்திரம்….தீரா வெறி கொண்ட புரட்சியாளர்களால் மட்டுமே முடியும்…

ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று. ”சிறந்த அரசியல் போராளியானவன் சிறந்த படைத்துறை வீரனாக இருக்க வேண்டும். அதாவது எமது மண்ணின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு அல்லது எதிரி எமது நிலத்தைக் கபளீகரம் செய்வதைத் தடுப்பதற்கு நாம் சிந்துகின்ற இரத்தத்தின் விலை தெரிந்தவர்கள் அரசியலை நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.”

தாயக மக்களின் அவலம் போக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தொடர் செயல்பாடுகள் புலம் பெயர்ந்த மக்களால் கருத்து வேறுபாடு இன்றி நிகழ்த்த வேண்டும்.

சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும். தழிழ் மீளும் நாளை தமிழே ஆளும்!

– ஈழத்து நிலவன்